பஸ்தார்: கடந்த தேர்தலில் பாஜகவின் மூக்கை அறுத்தோம், அடுத்த தேர்தலில் பாஜகவின் காதை அறுப்போம் என்று சட்டீஸ்கர் காங். எம்பி கூறினார். சட்டீஸ்கர் மாநில பாஜக முன்னாள் எம்பி தினேஷ் காஷ்யப் கடந்த சில நாட்களுக்கு முன் அளித்த பேட்டியில், ‘சட்டீஸ்கர் மாநிலத்தில் கடந்த இரண்டரை ஆண்டாக நடைபெறும் காங்கிரஸ் ஆட்சியில் எந்தவொரு நலத்திட்டத்தையும் செய்யவில்லை, விவசாயிகள் பிரச்னை, இளைஞர்களுக்கு வேலையின்மை அதிகரிப்பு, மது விற்பனை தடை செய்வதாக கூறி மக்களை ஏமாற்றியது போன்றவை உதாரணமாக கூறலாம்’ என்றார்.
இதற்கு பதிலளித்த காங்கிரஸ் எம்பி தீபக் பைஜ், ‘வேலையின்மை பிரச்னையை தீர்க்க எங்களிடம் ஐந்தாண்டு செயல் திட்டம் உள்ளது. ஐந்தாண்டு ஆட்சியில் இரண்டரை ஆண்டுதான் முடிந்துள்ளது. நாங்கள் எங்களது வாக்குறுதியை நிறைவேற்றுவோம். மோடி அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. அதனால்தான், பெரிய அளவில் அமைச்சரவை விரிவாக்கம் நடந்துள்ளது. சட்டீஸ்கருக்கு எத்தனை அமைச்சர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். சட்டீஸ்கரில் இருந்து 9 பாஜக எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் நாடாளுமன்றத்தில் கைதட்டல் வேலைகளை மட்டுமே செய்வார்கள். சட்டீஸ்கர் தேர்தலில் பாஜகவின் மூக்கு மட்டும் அறுக்கப்பட்டது. அடுத்த தேர்தலில் காதுகளும் அறுக்கப்படும்’ என்று கூறினார்.