நாகர்கோவில்: நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை கூடுதல் கட்டிடத்தில் கொரோனா சிகிச்சை வார்டு செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 102 பேர் சிகிச்சையில் உள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் 60 பேர் வரை உள்ளனர். இந்நிலையில் கூடுதல் கட்டிடத்தின் படிக்கட்டு பகுதியில் தேங்கி கிடந்த அட்டை பெட்டி குவியலில் நேற்றிரவு சுமார் 7.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. காற்று காரணமாக தீ பரவத் தொடங்கியது. புகை சிகிச்சை வார்டுக்குள் செல்லவே, கொரோனா நோயாளிகள் பீதியில் வெளியே ஓடி வந்தனர். செயற்கை சுவாசம் பெற்று வந்த 13 நோயாளிகளை மருத்துவமனை ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு, அருகில் உள்ள வேறு கொரோனா வார்டுகளுக்கு மாற்றினர்.