×

ஜெயலலிதாவை விட கூடுதல் வெற்றியை பெற்றுள்ளோம்: ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

சேலம்: ஜெயலலிதாவை விட இந்த தேர்தலில் கூடுதல் வெற்றி பெற்றுள்ளோம் என்று சேலத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.  சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், கெங்கவல்லி, கொங்கணாபுரம், இடைப்பாடி, ஓமலூர், சங்ககிரி உள்ளிட்ட புறநகர் தகவல் தொழில்நுட்ப அணியின் ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது, இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

ஜெயலலிதா இறந்த பின்பு இயற்கை சீற்றங்களாலும், கொரோனா தொற்று ஏற்பட்டதாலும் கடுமையான சவால்களை சந்தித்து அதிமுக ஆட்சி 4 ஆண்டுகள் எனது தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. ஜெயலலிதா 1996 மற்றும் 2006ம் ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். ஒரு தொண்டனாக கட்சியை வழிநடத்தி அதைவிட  கூடுதல் வெற்றியை 2021 சட்டமன்ற தேர்தலில் பெற்றுள்ளோம். ஒரு லட்சத்து 98 ஆயிரம் வாக்குகள் மேலும்  பெற்றிருந்தால் 45 சட்டமன்ற தொகுதிகளை பிடித்து இருக்க  முடியும். நிறைய இடங்களில் 1000, 500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளோம். இதற்கு நமது உழைப்பு குறைவு என்றுதான்  கூற முடியும்.

 அதிமுகவின் பலம் ஒரு நாளும் குறையாது. சொந்த உழைப்பில், சொந்த செல்வாக்கில் முன்னேற வழி இல்லாதவர்கள்,  அடுத்தவர் உழைப்பை சுரண்டி சாப்பிட நினைப்பவர்கள் இக்கட்சியில் இருந்து வெளியேறி உள்ளனர். அவர்கள் ஒரு கட்சியில் நிரந்தரமாக இருந்தவர்கள் இல்லை. பல கட்சி மாறியவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது தவறாகிவிட்டது. நம்மால் நீக்கப்பட்ட அவர்கள் யார்?  என்பது உங்களுக்கே தெரியும். தன்னம்பிக்கையோடு செயல்படுங்கள்.  இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக சேலம் வந்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவும் இந்த கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டம் முடிந்ததும் இருவரும் தனியாக ஆலோசனை நடத்தினர்.

Tags : Jayalalithah ,Edibati Palanisami , Jayalalithaa, Success, Advice, Edappadi Palanisamy
× RELATED ஜெயலலிதா ஆட்சியில் வாச்சாத்தி கிராம...