×

யூரோ கோப்பை பைனலுக்கு 4வது முறையாக முன்னேறியது இத்தாலி

லண்டன்: யூரோ கோப்பை அரையிறுதியில் ஸ்பெயினை வீழ்த்திய  இத்தாலி அணி  4வது முறையாக பைனலுக்கு  முன்னேறியுள்ளது. யூரோ கோப்பை  கால்பந்து தொடரின்  முதல் அரையிறுதியில் நேற்று முன்னாள் சாம்பியன்களான  ஸ்பெயின் - இத்தாலி அணிகள் மோதின. அதில் ஸ்பெயின் 5வது முறையாகவும்,  இத்தாலி 6வது முறையாகவும்  அரையிறுதியில் விளையாடின. தொடக்கத்தில் இருந்தே துடிப்புடன் விளையாடிய ஸ்பெயின் வீரர்கள், இத்தாலியின்  கோல் பகுதியை தொடர்ந்து முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர். அதனால்  இத்தாலி  தற்காப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இடைவேளை வரை 0-0 என சமநிலையே நீடித்தது. 2வது பாதியில் தாக்குதலை ஆரம்பித்த இத்தாலி அணிக்கு, 60வது நிமிடத்தில் பெடரிக்கோ சியசா  கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். இதற்கு பதிலடி கொடுக்க, ஸ்பெயின் பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக் அடிக்கடி வீரர்களை மாற்றி, மாற்றி களமிறக்கினார். அப்படி மாற்று வீரராக களம் கண்ட அல்வரா மொராட்டா 80வது நிமிடத்தில்  கோல் அடித்து 1-1 என சமநிலை ஏற்படுத்தினார். ஆட்டம் முடியும் வரை இதே நிலை நீடித்தது. கூடுதலாக வழங்கப்பட்ட 30 நிமிடங்களிலும் இரு அணிகளால் கோல் அடிக்க முடியவில்லை. பெனால்டி ஷூட் அவுட்டில் இத்தாலி கோல் கீப்பர் தொன்னரும்மா சிறப்பாக செயல்பட்டு அசத்த, அந்த அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி 4வது முறையாக பைனலுக்கு முன்னேறியது.

Tags : Italy ,Euro Cup , Euro Cup, Final, Italy
× RELATED ஒரே நாடு, ஒரே இட்லி என சுடப்பார்க்கிறார் மோடி; நடிகர் கருணாஸ் கலாய்