மாஸ்கோ: உலகம் பல கோடி மக்களை சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோய் வாட்டி வதைக்கிறது. சுவையான பழங்கள், பானங்கள் மட்டுமின்றி, பசு மாட்டு பாலை கூட அவர்களால் நிம்மதியாக ருசித்து குடிக்க முடியாது. ஏனெனில், மாட்டு பாலில் இருக்கும் ‘லாக்டோஸ்’ எனப்படும் சத்து, அவர்களுக்கு பரம எதிரி. இதில், சர்க்கரை சுவை அதிகளவில் கலந்து இருப்பதே இதற்கு காரணம். லாக்டோஸ் உள்ள பாலை குடித்தால், உடலில் சர்க்கரை அதிகரித்து விடும். சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்ல, உலகில் 70 சதவீத மக்களுக்கு லாக்டோஸ் ஒவ்வாமை இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இப்படிப்பட்ட குறைகளை கொண்டவர்களின் மாட்டு பாலை அப்படியே குடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கமும், கவலையும் விரைவில் தீர போகிறது. ஆமாம். லாக்டோஸ் இல்லாத பாலை கொடுக்கும் பசுவை, குளோனிங் முறையில் ரஷ்ய விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்கின்றனர்.
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ அருகில், ‘ஸ்கோல்கோவா அறிவியில் தொழில்நுட்ப நிலையம்’ செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக, ‘எர்னஸ்ட் கூட்டு கால்நடை அறிவியல் மையம்’ உள்ளது. இதன் விஞ்ஞானியான காலினா சிங்கினா தலைமையிலான குழு, லாக்டோஸ் இல்லாத பாலை கொடுக்கும் பசுவை குளோனிங் முறையில் உருவாக்கி இருக்கின்றனர். கடந்தாண்டு ஏப்ரல் 10ம் தேதி 63 கிலோ எடையுடன் பிறந்த இது, தற்போது 410 கிலோ எடை கொண்ட பிரமாண்ட பசுவாக வளர்ந்துள்ளது.
இந்த பசுவின் மரபணுவில் இருந்து லாக்டோசை உருவாக்கக் கூடிய ‘பீட்டா லாக்டோகுளோபிலின்’ என்ற மரபணுவை இந்த விஞ்ஞானிகள் வெற்றிகரமாக நீக்கி உள்ளனர். இதன் மூலம், லாக்டோஸ் இல்லாத பாலை கொடுக்கும் பசுவை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். இந்த பசுவினம் அதிகளவில் பெருக்கப்பட்டால், ‘லாக்டோஸ் பால் ஒவ்வாமை’ உள்ளவர்கள் அனைவரும், எதிர்காலத்தில் பசு மாட்டு பாலை அப்படி குடித்து மகிழலாம்.