×

வணிக வளாகங்கள் மற்றும் பொது இடங்களில் பாதுகாப்பு வழிமுறைகளை மீறினால் அபராதம்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், அங்காடிகள் மற்றும் பொது இடங்களில் பொது மக்கள் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தங்களுடைய தேவைகளுக்காக வணிக வளாகங்கள், அங்காடிகள் உட்பட பல்வேறு பொதுஇடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், அவ்வப்பொழுது கைகளை சோப்பு கரைசல் மற்றும் சானிடைசர் கொண்டு சுத்தப்படுத்திக் கொள்ளுதல் போன்ற அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

மேலும், திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்குள் பங்கேற்பதை உறுதி செய்யும் வகையில் ஓட்டல்கள், கல்யாண மண்டபங்கள், சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு இணையதளத்தின் வாயிலாக தெரியப்படுத்த உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏப்ரல் 9ம் தேதி முதல் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 5,907 நிறுவனங்கள் மற்றும் 29,096 தனிநபர்களிடமிருந்து ரூ.3.18 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், திருமணம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பதிவு செய்யப்பட்ட 1,426 மண்டபங்கள் மற்றும் ஹோட்டல்களில் மாநகராட்சி வருவாய்துறை அலுவலர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 31 இடங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டு இதுவரை ரூ.1,29,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Penalties for violating safety regulations in shopping malls and public places: Corporation Commissioner Warning
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...