சென்னை: ஜெர்மனியில் அமைந்துள்ள கோலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தொடர்ந்து இயங்க ரூ.1.25 கோடி நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் மொழியின் வளர்ச்சியில், ஜெர்மனியில் உள்ள கோலோன் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ் பிரிவும் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் இந்தியவியல், தமிழியில் ஆய்வு நிறுவனம் 1963ம் ஆண்டில் தொடங்கப்பட்டு, தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ் துறைக்கு உருவான நிதி பற்றாக்குறையால், அங்கு பணிபுரிந்த தமிழ் பேராசிரியர் உல்ரிக்க நிக்லாஸ் செப்டம்பர் 2020ல் ஓய்வு பெற்றபின், தமிழ் பிரிவை மூடுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது.
அந்தச் சமயத்தில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் தமிழ் துறை தொடர்ந்து இயங்குவதற்கு தேவையான நிதியில் பாதியை திரட்டி கோலோன் பல்கலைக்கழகத்திற்கு அளித்ததால், தமிழ்ப் பிரிவை மூடும் முடிவு ஜூன் 2022 வரை ஒத்திவைக்கப்பட்டது. கோலோன் பல்கலைக்கழக தமிழ் துறைக்கு தேவையான நிதியில் 1 கோடியே 25 லட்சம் ரூபாயை, 2019ல் முந்தைய ஆட்சியாளர்கள் தமிழக அரசின் சார்பில் அளிப்பதாக அறிவித்திருந்த நிலையில், அதனை உடனடியாக அளித்து அந்த பல்கலைக்கழகத்திற்கு உதவ வேண்டுமென, அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.
எனினும், தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட அத்தொகை விடுவிக்கப்படாததை அறிந்த முதல்வர், கோலோன் பல்கலைக்கழக தமிழ் துறை தொடர்ந்து, தொய்வின்றி, இயங்கிட ஏதுவாக, தமிழக அரசின் சார்பில் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாயை உடனடியாக கொலோன் பல்கலைக்கழக தமிழ் துறைக்கு வழங்கிட நேற்று உத்தரவிட்டுள்ளார். முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் செயல்பட்டு வரும் இந்த அரசு, இப்படிப்பட்ட திட்டங்களுக்கு நிதியுதவி செய்து, கோலோன் பல்கலைக்கழக தமிழ் துறை இன்னும் இரண்டு ஆண்டுகளில் 60 ஆண்டுகளை காணும் நல்வாய்ப்பிற்கு உதவிடும் என்பதோடு, தமிழ்மொழி, பண்பாடு, நாகரிகம் போன்றவற்றை உலகளவில் பரவிட என்றென்றும் துணை நிற்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.