×

முன்னாள் ஒன்றிய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி டெல்லியில் கொலை: சலவை தொழிலாளி உட்பட 2 பேர் கைது

புதுடெல்லி: முன்னாள் ஒன்றிய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலம், டெல்லியில் உள்ள அவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக சலவை தொழிலாளி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் சேலம் தொகுதியில் 1984 முதல் 1996 வரையிலும், 1998 முதல் 2000 வரை திருச்சி தொகுதி எம்.பியாகவும் பதவி வகித்தார். நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசில் 1991 முதல் 1993 வரை சட்டம், நீதி மற்றும் கம்பெனி விவகாரத்துறை அமைச்சராக இருந்தார். அதன் பின்பு, பாஜவில் இணைந்த அவர் வாஜ்பாய் அரசில் 1998 முதல் 2000 வரை மின்துறை அமைச்சராக இருந்தார். கடந்த 2000ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி ரங்கராஜன் குமாரசாமி காலமானார்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்த அவரது மனைவி கிட்டி குமாரமங்கலம் (67), டெல்லியில் உள்ள ஆனந்த் விகார் பகுதியில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் அவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது கதவை தட்டும் சத்தம் கேட்டு, வேலைக்கார பெண் வீட்டின் கதவைத் திறந்தார். அங்கு நின்றிருந்த அப்பகுதியை சேர்ந்த சலவை தொழிலாளி எதிர்பாராத விதமாக வேலைக்கார பெண்ணை கீழே தள்ளினார். சலவை தொழிலாளியுடன் வந்த 2 பேர் அவரை கண்மூடித்தனமாக தாக்கினர். இதில் அவர் மயக்கம் அடைந்ததும் அறைக்குள் அடைத்து வைத்தனர். பின்னர், கிட்டி குமாரமங்கலம் இருந்த அறைக்குள் சென்ற கொள்ளையர்கள், அவரது முகத்தின் மீது தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கிட்டி குமாரமங்கலத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இக்கொலை சம்பவம் தொடர்பாக, அவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் சலவை தொழிலாளியான ராஜூ லக்கான் (24) என்ற இளைஞரையும், கொலைக்கு உதவி மற்றொரு நபரையும் கைது செய்தனர். தலைமறைவான மற்றொருவரை தேடி வருகின்றனர். கொலை நடந்த இடத்தில் பீரோ, சூட்கேஸ்கள் உடைக்கப்பட்டு இருந்ததால் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் நகை மற்றும் பணத்தை அங்கிருந்து கொள்ளை அடித்து சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

* டெல்லிக்கு புறப்பட்ட மகன்
ரங்கராஜன் குமாரமங்கலம், கிட்டி குமாரமங்கலத்துக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதில் மகள் ருச்சிரா குமாரமங்கலம் ஆவார். மகன் ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் தற்போது தமிழக காங்கிரஸ் கட்சியில் செயல் தலைவராக உள்ளார். சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் அவர் டெல்லி புறப்பட்டு சென்றார்.

Tags : Former Union Minister ,Rangarajan Kumaramangalam ,Delhi , Former Union Minister Rangarajan Kumaramangalam's wife murdered in Delhi: 2 arrested, including laundry worker
× RELATED முன்னாள் ஒன்றிய அமைச்சரும், மூத்த...