சண்டிகர்: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உளவு பார்த்த 2 ராணு வீரர்களை பஞ்சாப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானின் இன்டர் சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) அமைப்புக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில், இரண்டு ராணுவ வீரர்களை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக பஞ்சாப் காவல்துறை இயக்குநர் ஜெனரல் தின்கர் குப்தா கூறுகையில், ‘கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மே மாதங்களுக்கு இடையிலான நான்கு மாதங்களில், எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல்காரன் ரன்வீர் சிங் தொடர்பான 900க்கும் மேற்பட்ட ஆவணங்களை பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளிடம் குற்றம்சாட்டப்பட்ட கார்கில் எழுத்தர் (ராணுவ வீரர்) குர்பேஜ் சிங் மற்றும் மற்றொரு ராணுவ வீரர் ஹர்பிரீத் சிங் ஆகியோர் பகிர்ந்துள்ளனர்.
கடந்த மே 24ம் தேதியன்று ஹெராயின் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரன்வீர் சிங்கிடம், மூத்த ராணுவ எஸ்பி நவீன் சிங் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது, குர்பேஜ் சிங் மற்றும் ஹர்பிரீத் சிங் மூலம் ராணுவம் தொடர்பான ரகசிய ஆவணங்களை பாகிஸ்தான் ஏஜென்சிகளுக்கு கொடுத்துள்ளான். இதற்காக, பாகிஸ்தான் ஏஜென்சிகள் பணம் கொடுத்துள்ளன. ராணுவ அதிகாரிகளின் விசாரணைகள் முடிக்கப்பட்ட பின்னர் குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் ஜலந்தர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள், குர்பேஜ் சிங் மற்றும் ஹர்பிரீத் சிங் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்’ என்றார்.