×

நாகை மாவட்டம் திருக்குவளைக்கு குடும்பத்தோடு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்!: கலைஞர் நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்தினார்..!!

நாகை: நாகை மாவட்டம் திருக்குவளைக்கு குடும்பத்தோடு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்தினார். திருவாரூரில் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடத்தை திறந்துவைத்த பின்னர் கலைஞரின் சொந்த ஊரான திருக்குவளைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு சென்றார். முதலமைச்சருடன் அவரது குடும்பத்தினரும் திருக்குவளை சென்றனர். கலைஞர் இல்லத்திற்கு சென்ற அவர்கள், அங்குள்ள முத்துவேலர், அஞ்சுகம் அம்மையார், கலைஞர் மற்றும் முரசொலிமாறன் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அங்கு வைக்கப்பட்டுள்ள கலைஞரின் புகைப்பட தொகுப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

இதை தொடர்ந்து கலைஞர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த குறிப்பேட்டில் முதலமைச்சர் பதிவிட்டுள்ளார். அதில், பதவி என்பது பொறுப்பு; பொறுப்போடு எப்போதும் மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று கலைஞர் அடிக்கடி கூறுவதை மனதில் வைத்து பதவியை பொறுப்பு என தனது மனதில் ஏற்று தன் பயணம் தொடரும் என்று உறுதிமொழி ஏற்பதாக குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட முதலமைச்சர், திருக்குவளையில் இருந்து புறப்பட்டு சென்றார்.

பின்னர் நாகை மாவட்டம் சீராவட்டம் பகுதியில் வெண்ணாற்றில் இரண்டரை கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெறும் சீரமைப்பு பணிகளை அவர் பார்வையிட்டார். முன்னதாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 12 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள் திறப்பு விழாவில் முதலமைச்சர் பங்கேற்றார். 210 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.


Tags : Tiruguala ,Nagi district BC ,Q. Stalin , Thirukuvalai, Chief MK Stalin, Artist House
× RELATED கனமழையால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு