உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் கிராமத்தில் பொது சந்தை கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இவற்றை மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயசுதா நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதிகாரிகளிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து சாலவாக்கம் பகுதியில் இயங்கி வரும் நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையத்தினை பார்வையிட்டார். பின்னர் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடந்து வரும் கால்வாய் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
இதனை தொடர்ந்து வாடாதவூர் மயான பாதை, சிறுபினாயூர் கிராமத்தில் சிறுபால பணிகள் என அரசு திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் சாலவாக்கம் கிராம சேவை மைய வளாகத்தில் மரம் நட்டார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், வேல்முருகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன், ஊராட்சி செயலாளர் சக்திவேல் உட்பட பலர் உடனிருந்தனர்.