×

தென்மேற்கு பருவமழை தீவிரம்.. 10,11ல் நீலகிரி , கோயம்புத்தூர், தேனி, குமரியில் கனமழை.. 3 மாவட்டங்களில் மண் சரிவு அபாயம்!!

சென்னை : தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைவதன் காரணமாக வருகின்ற 10 மற்றும் 11-ம் தேதிகளில் நீலகிரி , கோயம்புத்தூர், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல் திண்டுக்கல் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், திருவள்ளூர் , காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சென்னை மாவட்டங்களில் பல இடங்களில் லேசான மழையும் பெய்ய கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் மலைப் பகுதிகளில் மண்சரிவு ஏற்படக் கூடும் என்பதால் பொதுமக்கள் மலை ஏற்றத்தை தவிர்க்க வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் வானிலை ஆய்வு மையத்தின் செய்தி குறிப்பில், சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் .நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். இன்று முதல் வருகின்ற 11ம் தேதி வரை குமரி கடல் மன்னார் வளைகுடா ,மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள் மத்திய மேற்கு வங்கக்கடலை ஒட்டி ஆந்திர கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அதேபோல் தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா ,கர்நாடகா கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் பலத்த காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் . தென் மேற்கு மத்திய தரைக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்,என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 7 மாவட்டங்களில் கனமழை!!

*குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, வேலூர் , ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

நாளை திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்,கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் ,தென்காசி மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்ய கூடும்.

வருகின்ற 9ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags : Nilagiri ,Coimbatore ,Honeyy ,Kumari , தென்மேற்கு
× RELATED நீலகிரியில் மழை குறைந்ததால் மைக்ரோ...