×

வாழ்க்கையை அதன் போக்கில் வாழலாம்! சின்னத்திரை நாயகி ஆஷிகா படுகோனே!

நன்றி குங்குமம் தோழி

தமிழக மக்களுக்கும், தொலைக்காட்சி தொடர்களுக்கும் அவ்வளவு ஒரு நெருக்கம். சிறியவர் முதல் பெரியவர் வரை, பாமரன்-பணக்காரன் என்ற பாகுபாடில்லாமல் மாலை  ஆறு மணிக்கு மேல் எல்லோருமாக ஒன்று கூடுவது தொலைக்காட்சி முன். வீட்டில் சண்டைப் போட்டவர்கள் கூட தங்களது கருத்துக்களை அந்த தொடர்கள்  மூலம் பகிர்ந்து சமாதானமாகும் இடமாக ஒரு சில வீடுகளில் காண முடிகிறது.

எவ்வளவோ அலைவரிசைகளும், இணையங்கள் வந்தாலும் தொடர்களில் முன்னோடியாகவும், அனைத்து மக்கள் வீட்டின் அங்கமாகவும் இருக்கும் சன் தொலைக்காட்சியில் வரும் தொடர்களில் உள்ள கதாபாத்திரங்களை தங்களது உறவாகவேபலர் ஏற்றுக் கொண்டுள்ளனர். அப்படிஒரு புதிய உறவாக தற்போது இணைந்துள்ளார், ‘தமிழ்ச்செல்வி’ தொடர் மூலம் அறிமுகமாகியுள்ள ஆஷிகா படுகோனே.

பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட ஆஷிகாவின் தந்தை வங்கி மேலாளர். வேலை நிமித்தமாகப் பல மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்ததால் அங்குள்ள மக்களின் கலாச்சாரம்,  புதிய புதிய நண்பர்கள் என தற்போது ஆஷிகாவின் நட்பு வட்டாரம் பெரிது. இல்லத்தரசியான அம்மா, திருமணமாகி வெளிநாட்டில் குடிபெயர்ந்திருக்கும் அக்கா இவர்கள்தான் ஆஷிகாவின் உலகம்.

‘‘கம்ப்யூட்டர் சயின்ஸ் எஞ்சினியரிங் படித்துக் கொண்டிருக்கும் போது நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது’’ என்று கூறும் ஆஷிகா, தான் நடிப்பு துறைக்கு வந்த அனுபவம் சற்று வித்தியாசமானது என்கிறார். “கன்னடத்தில் ‘நிஹரிகா’ என்ற தொடர் பிரபலம். அந்த தொடரில் நாயகியாக நடித்துக் கொண்டிருந்தவர் எதேச்சையாக ஒரு விபத்தில் இறக்க நேர்ந்தது. எங்கள் உறவினர் ஒருவர் நடிப்புத்துறையில் இருக்கிறார். இறந்த அந்த பெண் போலவே நான் இருப்பதினால், என்னை அவர் மூலமாக அந்தத் தொடரின் குழுவினர் அணுகினர்.

சிறுவயதிலிருந்து பள்ளி, கல்லூரி கலாச்சார நிகழ்ச்சிகளில் கலந்து பல பரிசுகள் வாங்கியிருக்கிறேன். குறிப்பாக மாறுவேடப் போட்டிகளில் ஆர்வம் அதிகம். எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது மாறுவேடப் போட்டிக்காக நான் போட்ட பாட்டி வேஷம். வீட்டில் படிப்புக்குத்தான்
முக்கியத்துவம் என்பதால் கலை சம்பந்தமாக இயங்குவதில் கொஞ்சம் தயக்கம் இருந்தது. முதல் தொடரில் நடிக்க வாய்ப்பு வந்த போது கூட வீட்டில் யாரும் முதலில் சம்மதிக்கவில்லை. பல போராட்டங்கள் மற்றும் எதிர்ப்பினை தாண்டி தான் அந்த கன்னட தொடரில் நடிச்சேன்.

சின்னத்திரையில் என் படிப்பை பார்த்த பிறகு தான் வீட்டில் கொஞ்சம் சமாதானமானார்கள். கன்னடத் தொடரைத் தொடர்ந்து தெலுங்கில் ஒரு மெகா தொடரில் ஹீரோயினாக நடித்தேன். கன்னட, தெலுங்கு மக்களிடம் பரிட்சியமானேன். நடிப்பு பற்றி சுத்தமாக அறிமுகமில்லாத என்னை, பட்டைத் தீட்டியது தெலுங்கில் ஒளிபரப்பான ‘திருவேணி சங்கமம்’ தொடரின் இயக்குநர் கத்தலோ ராஜ்குமார் அவர்கள் தான். அவர் தான் எப்படி நடிக்கணும், எப்போது என்ன மாதிரியான எக்ஸ்பிரஷன் தரணும்னு சொல்லிக் கொடுத்தார். அந்த தொடருக்காகச் சிறந்த  அறிமுக நடிகை விருது
பெற்றேன்’’  என்றார்.

‘தமிழ்ச் செல்வி’ தொடர் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமான அனுபவத்தை பற்றிக் கூறும் ஆஷிகா, “கன்னட, தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த போது தமிழில் ஒரு தொடர் நடிக்கக் கேட்டார்கள். சிறு வயதிலிருந்தே வெவ்வேறு இடங்களில் பயணித்ததால் தமிழ் மொழி மீதும் எனக்கு ஒரு இனம் புரியாத பற்றுண்டு. தமிழ் மொழியை கற்றுக் கொள்ள இது ஒரு வாய்ப்பாகவும் ேமலும் தமிழ்க் கலாச்சாரத்தின் உள்ள ஈர்ப்பினாலும் உடனே ஓ.கே சொல்லிட்டேன்.

பொதுவாகத் தொடர் என்றால் அழுவது, ஓவர் ஆக்டிங் என்றிருக்கும். ஆனால், தமிழ்ச் செல்வி வித்தியாசமானவள். சுட்டியான, தைரியமான பொண்ணு. இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடாக இருந்தாலும் கிராமம் என்ற ஒற்றைக் குடையில் இணைகிறோம். அப்படி கிராமத்திலிருந்து ஒரு பெண் நகரத்திற்கு வந்து சமாளிக்கும் சவால்களைச் சந்தித்து அதில் எப்படி தன் கலாச்சாரம் மீறாமல் தகவமைத்துக் கொள்கிறாள். அதேபோல் கிராமப்புற பெண்களுக்கு நகரத்தின் மீதிருக்கும் மிரட்சியை உடைத்து, அவர்களுக்கு ஊக்கமாக இருக்கக் கூடியவள்தான் தமிழ்ச் செல்வி.

இந்த தொடரில் நடிக்கும் சக நடிகர்கள், இயக்குநர் ரொம்ப ஃபிரண்ட்லியா இருக்காங்க. தமிழ் கற்றுக் கொள்வதற்கு மிகவும் உறுதுணையாக இருப்பதோடு, நடிப்புத் துறையிலும் உதவியாக இருக்கிறார்கள். எனக்கு நீண்ட தூரப் பயணம் செய்வது, வீட்டில் பாட்டுப் போட்டு டான்ஸ் ஆடுவதில் அதீத விருப்பம்.

சாப்பாட்டுப் பைத்தியம் என்பதால் விதவிதமாக சமைத்து சாப்பிட பிடிக்கும். என்னதான் சாப்பாட்டு பிரியையாக இருந்தாலும், உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பேன். காலை வாக்கிங், ஜாக்கிங், சின்னச் சின்ன ஒர்க்கவுட் செய்வேன்” என்றவர் தனது எதிர்காலத் திட்டம் பற்றிப் பேசுகிறார். ‘‘திரைப்படங்களில் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் ஏற்று நடிப்பேன். இந்த இயக்குநர், நடிகர் என்றெல்லாம் இல்லாமல் சவாலான கதாபாத்திரமாக இருக்க வேண்டும். நான் வரும் காலங்களைப் பற்றித் திட்டமிட்டுக் குழப்பிக் கொள்வது கிடையாது. இன்றைய நாளில் இது நடந்து கொண்டிருக்கிறது.

நாளை என்ன நடக்கும் என்பது விடிந்தால் தான் தெரியும். நாளைக்கு நாம் இதெல்லாம் பண்ணனும் என்று நினைத்துக் கொண்டு, அது நடக்காமல் போனால் மன வருத்தம் தான் மிச்சம். அதற்காகத் திட்டமிடுதல் அவசியமில்லை என்று சொல்லவில்லை. அது சரியானதாக இருக்கும் போது எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. இல்லாத போது நாம் மட்டுமில்லாமல், நம்மைச் சார்ந்தவர்களுக்கும் தொந்தரவாக அமையும். எனவே, வாழ்க்கையை அதன் போக்கிலே விட்டு விடுகிறேன். அப்படித்தான் இன்று வரை ஓடிக் கொண்டிருக்கிறது” என்றார்.

- ஆஷிகா படுகோனே!
ஏ.டி.தமிழ்வாணன்

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!