க.பரமத்தி : உலக விலங்கு வழி நோய்த்தொற்று தினத்தையொட்டி கால்நடை விவசாயிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.க.பரமத்தி ஒன்றியம் எலவனூர் கால்நடை மருந்தகம் சார்பில் 6, 7ம் தேதி உலக விலங்கு வழி நோய்த்தொற்று தினத்தையொட்டி கால்நடைகளுக்கு தடுப்பூசி வழங்கும் முகாம் நடந்தது. முகாம் தொடக்க விழாவில் எலவனூர் கால்நடை மருத்துவர் மோகன்ராஜ் வரவேற்றார். ஊராட்சித் தலைவர் இந்துமதி பாலசுப்பிரமணி முன்னிலை வகித்தார்.
கரூர் கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் சரவணகுமார் தலைமை வகித்தார். முகாமில் கரூர் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் தட்சணாமூர்த்தி கலந்துகொண்டு விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கும் மனிதர்களிலிருந்து விலங்குகளுக்கும் பரவக் கூடிய நோய் காற்று வழியாக பாதிக்கப்பட்ட விலங்கிடமிருந்து மனிதனுக்கு தொற்று (பன்றி காய்ச்சல் மற்றும் பறவை காய்ச்சல்) பரவுகிறது. விலங்கிடமிருந்து தண்ணீர் மற்றும் உணவு வழியாக மனிதனுக்கு தொற்று சால்மோனல்லா, ஈகோலை பரவுகிறது. வளர்ப்பு பிராணியான ஆடு, மாடு, பன்றி, கோழி, ஆகியவைகளிடமிருந்து (எக்ஸினோகாக்கோசிஸ்) (பன்றிகாய்ச்சல் மற்றம் பறவைகாய்ச்சல்) மூலம் நேரடியாக பரவுகிறது.
விலங்கிடமிருந்து கால்நடை மருத்துவர்களுக்கும் கறிக்கடை தொழிலாளர்களுக்கும் தோல் பதப்படுத்தும் தொழிலாளர்களுக்கு விலங்கு சார்ந்த தொழில்புரிவோருக்கு (ஆந்த்ராக்ஸ், புரூசெல்லோசிஸ்) பரவுகிறது. மேலும் நோய் பரவும் முறைகள் பற்றியும் தடுப்பு முறைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். முகாமில் உலக விலங்கு வழி நோய்த்தொற்று தின விழிப்புணர்வு துண்டு பிரசுரம் கால்நடை விவசாயிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு இலவசமாக வெறி நோய் தடுப்பூசி (ரேபிஸ் தடுப்பூசி) மற்றும் குடல்குழு நீக்கமும் மருத்துவ குழுவினரால் செய்யப்பட்டு கால்நடைகளுக்கு பல்வேறு பரிசோதனைகளும் நோய்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது.அரவக்குறிச்சி: உலக விலங்குகளினால் பரவும் நோய்கள் தடுப்பு தினத்தையொட்டி அரவக்குறிசியை அடுத்த மலைக்கோவிலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஓந்தாம்பட்டி கால்நடை மருத்துவமனை இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.
இதற்கு நாகம்பள்ளி ஊராட்சி தலைவர் தமிழ்மணி தலைமை வகித்தார். கால்நடை உதவி இயக்குநர் ராஜேந்திரன் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் பிரியதர்ஷினி முன்னிலை வகித்தனர். கால்நடை மருத்துவர் சுமதி பேசினார். இதன் ஒரு பகுதியாக நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கருப்புச்சாமி, சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர் கலந்துகொண்டனர்.பின்னர் மலைக்கோவிலூர், ஈசநத்தம் மற்றும் குரும்பபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உறுதிமொழியை சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் எடுத்துக்கொண்டனர்.