திருச்சி: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் பால் சந்திரமோகன் கைது செய்யப்பட்டிருக்கிறார். திருச்சியில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றி வந்தவர் பேராசிரியர் பால் சந்திரமோகன். அவரிடம் படிக்கும் மாணவிகளிடம் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கல்லூரி முதல்வரிடம் மாணவிகள் புகார் மனு அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணைக் குழு உறுப்பினர்களான வக்கீல் ஜெயந்தி ராணி தலைமையிலான குழுவினர், தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகன் மற்றும் உதவி பேராசிரியர் நளினி உள்ளிட்டோரிடம் விசாரணை செய்து அதன் அறிக்கையை கல்லூரி முதல்வரிடம் தாக்கல் செய்துள்ளனர்.
தொடற்சியாக அவர் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதை அடுத்து, சமூக வலைத்தளங்களில் மாணவிகளின் கடிதம் வெளியானது. பத்திரிக்கை, தொலைக்காட்சியிலும் செய்திகள் வெளியிடப்பட்டது. பிஷப் ஹீபர் பேராசிரியர் பால் சந்திரமோகன் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து மாவட்ட சமூக நல அலுவலரின் புகாரில் தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகன் மற்றும் மாணவிகளிடம் நேரடியாக விசாரணை நடத்தினர். இந்நிலையில், புகார் உறுதி செய்யப்பட்டதால் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் தற்போது பால் சந்திரசேகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 4 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.