ஜோலார்பேட்டை : திருப்பத்தூர் மாவட்டத்தில் முதல்முறையாக காவலர் உடல் தகுதி தேர்வுக்கு ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.. இந்த இடத்தை எஸ்பி சிபிசக்கரவர்த்தி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து அரசு திட்டங்களை விரைந்து செயல்படுத்த தற்போது திருப்பத்தூர் மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
மேலும் வேலூர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் பிரிக்கப்பட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் துறை சார்ந்த அலுவலகங்கள் செயல்படுத்துவதற்கான இடத்தேர்வு கட்டிடங்கள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாவட்ட காவல்துறை சார்பில் அலுவலகங்களுக்கான இடத்தேர்வு நடைபெற்று தற்போது தனியார் கட்டிடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், காவல் துறை சார்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்கள் காவலர் தேர்வுக்கு கடந்த ஆண்டு வரை பிற மாவட்டங்களுக்குச் சென்று உடல் தகுதி தேர்வில் கலந்து கொண்டனர். தற்போது மாவட்ட எஸ்பி சிபி சக்கரவர்த்தி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்கள் இந்த வருடத்தில் நடைபெறவிருக்கும் உடற்தகுதி தேர்வில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளவர்கள் வேறு மாவட்டங்களில் கலந்து கொள்ளாதவாறு திருப்பத்தூர் மாவட்டத்திலேயே காவலருக்கான உடல்தகுதி தேர்வு நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்.
அதனடிப்படையில் வருகிற 26ம் தேதி நடைபெறவிருக்கும் காவலர் உடற்தகுதி தேர்வை திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் நடத்த முடிவு செய்து அதற்கான இடம் தேர்வு ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பிறகு அதற்கான முன்னெச்சரிக்கையாக அங்கு உள்ள மைதானத்தில் உள்ள இடங்களை தூய்மைப்படுத்தவும் பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டுக்ெகாண்டார். ஆய்வின் போது தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பழனி, திருப்பத்தூர் டிஎஸ்பி சாந்தலிங்கம், தனிப்பிரிவு போலீஸ் திருக்குமரன் உட்பட காவல்துறையினர் பலர் உடன் இருந்தனர்.
மேலும் காவல் துறை சார்ந்து காவலர் தேர்வுக்காக இரண்டு மணி நேரம் பயணம் மேற்கொண்டு அருகாமையில் உள்ள மாவட்டத்தில் உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் குறிப்பாக உள்ளூர் பகுதியிலேயே காவலர் தேர்வுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெற உள்ளதால் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.