×

காரைக்குடியில் சிவசங்கரன் கடன் தள்ளுபடியை கண்டித்து ஏஐடியூசி ஆர்ப்பாட்டம்: சொத்துக்களை ஜப்தி செய்யவும் கோரிக்கை

சென்னை: சிவசங்கரன் வங்கிக்கடன் தள்ளுபடியை கண்டித்து காரைக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சிவசங்கரன். இவர் இங்கிலாந்தின் வெர்ஜின் தீவில் இருந்து செயல்படும் ஆக்சில் சன்ஷைன் லிமிடெட், பின்லாந்து நாட்டில் இருந்து செயல்படும் வின் விண்டு ஒய் என்ற நிறுவனங்களை நடத்தி வந்தார். இவருக்கு பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் மூலம் பல வங்கிகளில் மோசடிகள் நடந்தது ஏற்கனவே அம்பலம் ஆகின. இதேபோல், இவரது நிறுவனங்களில் ஒன்றான சிவா இண்டஸ்டிரீஸ் அண்ட் ஹோல்டிங்க்ஸ் நிறுவனமும், பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மிகப்பெரிய கடன் மோசடி செய்து, அதனை வங்கி அதிகாரிகள் உதவியுடன் சரிக்கட்டிய விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இவரால் துவக்கப்பட்ட சிவா இண்டஸ்டிரீஸ் அண்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு சென்ட்ரல் வங்கி, எல்ஐசி, பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் வங்கி, ஐடிபிஐ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்டவை வழங்கிய கடனில் மொத்தம் ரூ.4,863 கோடி பாக்கி உள்ளது. இதில் ரூ.323 கோடி மட்டும் வாங்கிக் கொண்டு கடனை சரிகட்டுவது என வங்கிகள் முடிவு செய்தன. இதன்மூலம், மக்கள் வரிப்பணம் சுமார் ரூ.4,540 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் உடந்தையோடு இந்த விவகாரத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சிவசங்கரனின் வங்கிக்கடன் ரூ.4,863 கோடியில் ரூ.4,540 கோடி தள்ளுபடி செய்யப்பட்டதை கண்டித்து சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ஏஐடியூசி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காரைக்குடி ஐடிபிஐ வங்கி மற்றும் பாங்க் ஆப் இந்தியா வங்கிகள் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடியூசி மாநில துணைபொதுச்செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். ஏஐடியூசி ஒருங்கிணைப்பாளர் ராஜா முன்னிலை வகித்தார். அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர் சங்க மண்டல செயலாளர் மணவழகன், மணிகண்டன், ஏஐடியூசி மாநில குழு உறுப்பினர் கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு பின் ஏஐடியூசி மாநில துணை பொதுச்செயலாளர் ராமச்சந்திரன் கூறுகையில், ‘‘கார்ப்பரேட் முதலாளி சிவசங்கரனுக்கு ரூ.4,540 கோடி கடனை தள்ளுபடி செய்த பாங்க் ஆப் இந்தியா, ஐடிபிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கிகளை வன்மையாக கண்டிக்கிறோம். ஆதரவாக செயல்பட்ட வங்கிகளின் உயர்மட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மோசடிக்கு துணை போன அதிகாரிகளை கைது செய்ய வேண்டும். சிவசங்கரனின் சொத்துக்களை ஜப்தி செய்ய வேண்டும். முறைகேடான தள்ளுபடியை நிறுத்தி வைக்க வேண்டும்’’ என்றார்.

Tags : AITUC ,Sivasankaran ,Karaikudi , AITUC protest in Karaikudi against Sivasankaran loan waiver: Demand for confiscation of assets
× RELATED பட்டாம்பி அருகே பர்னீச்சர் தொழிற்சாலையில் தீ விபத்து