சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் வன்னியரசு நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடந்த 30 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும், ஒட்டுமொத்த தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் களப்பணியாற்றி வருகிறார். அவருடைய நற்பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்காகவும், திட்டமிட்டு ஒரு சமூக பிளவை ஏற்படுத்த வேண்டும் என்றும் பிரிவினையை தூண்ட வேண்டும் என்ற நோக்கத்தோடும் பாஜவை சேர்ந்த கல்யாணராமன் தனது டிவிட்டர் பக்கம் மூலமாக மிக மோசமான வன்மமான கருத்துக்களை பரப்பி வருகிறார்.அவர் தொடர்ச்சியாக தன்னுடைய பதிவுகளில் ஒடுக்கப்பட்ட மக்களை கேவலப்படுத்துகிற வகையிலும், மிக மோசமான வார்த்தைகளையும் பயன்படுத்தி வருகிறார்.
கல்யாணராமன் ஏற்கனவே இசுலாமியர்களுக்கு எதிராக மதவெறியுடன் மத பிரிவினையை தூண்டுகின்ற வகையில் பதிவிட்டார் என்பதற்காக கைது செய்யப்பட்டு பிறகு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்ககூடிய திருமாவளவனை பற்றியும், அவரது குடும்பத்தை சார்ந்தவர்களையும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்.
இவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடந்த 23.10.2020 மற்றும் 2.11.2020 அன்று நான் புகார் அளித்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்காத காரணத்தால், தன்னை சட்டமோ, நீதியோ எதுவும் செய்ய முடியாது என்ற நினைப்பில் எங்கள் தலைவர் திருமாவளவனை மீண்டும் தாகாத வார்த்தை பயன்படுத்தி டிவிட்டரில் பதிவிட்டு அதை அனைவரும் டிரெண்டிங் செய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். எனவே கல்யாணராமன் மீது சமூக பிரிவினை உண்டாக்குதல், தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுப்படுத்துதல் தரக்குறைவான அவதூறு செய்தி வெளியிடுதல் ஆகிய குற்றங்களுக்காக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.