பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாரதிய ஜனதா கூட்டணி பெற்ற வெற்றி ஒரு சூழ்ச்சி என்று ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். ராஷ்டிரிய ஜனதா தளத்தின் 25வது ஆண்டு கொண்டாட்டத்தை ஒட்டி பாட்னாவில் பேசிய அவர், ராம் விலாஸ் பஸ்வானும், தமது தந்தை லாலு பிரசாத் யாதவும் நண்பர்கள் என்றார். பீகார் சட்டமன்ற தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களித்ததாக தேஜஸ்வி கூறினார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நிதிஷ் குமாரின் வெற்றி ஒரு சூழ்ச்சி எனவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக டெல்லியில் இருந்தபடி காணொலி வாயிலாக தொண்டர்கள் மத்தியில் லாலு பிரசாத் யாதவ் உரையாற்றினார். அப்போது நிதிஷ் குமார் ஆட்சியில் பீகாரில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வேலை தேடி வெளிமாநிலங்களுக்கு படையெடுக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக வேதனை தெரிவித்தார். வறுமை மற்றும் வேலையில்லா திண்டாட்டம் பீகாரில் உச்சம் அடைந்துள்ளது என்றும் அவர் புகார் கூறினார். மாட்டு தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்று ஜாமினில் வெளியே வந்துள்ள லாலு பிரசாத் யாதவ் நீண்ட இடைவெளிக்கு பிறகு தொண்டர்கள் மத்தியில் டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக பேசினார். உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவர் பலவீனமாக காணப்பட்டார்.