பழநி: பழநி மலைக்கோயிலில் நடக்கும் 6 கால பூஜைகளை கோயில் வெப்சைட்டில் கேட்கும் வசதியை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கினார். திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பாலாறு அணையிலிருந்து 22.62 கோடியில் பிரத்யேக குடிநீர் திட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து பஞ்சாமிர்தம் தயாரிப்புக்கூடம், மலைக்கோயில் கும்பாபிஷேக பணிகளை ஆய்வு செய்தார். முன்னதாக யானைப் பாதை வழியாக நடந்தே மலைக்கோயிலுக்கு சென்றார். அங்கு ஒலி வடிவில் ஆறு கால பூஜைகளையும் பக்தர்கள் கோயில் வெப்சைட்டில் கேட்கும் வசதியை துவக்கி வைத்தார்.
அங்கு தினக்கூலிகளாக உள்ள 30 ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய பரிந்துரை செய்தார். இதனைத்தொடர்ந்து சித்த மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட உள்ள இடம், கோயில் வளர்ச்சிப் பணிகளுக்காக கையகப்படுத்தப்பட உள்ள 52 ஏக்கர் இடம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். ஆய்வின்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார், திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி, வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கலெக்டர் விசாகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.