லண்டன்: கொரோனா பரவலால் அதிக உயிர்சேதத்தை சந்தித்த நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. சமீபத்தில் கொரோனா பரவல் குறைந்ததால், வரும் 21ம் தேதி முதல் முழுமையாக கட்டுப்பாடு தளர்வுகளை அறிவிக்க அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டிருந்தார். ஆனால், டெல்டா மரபணு மாற்ற வைரசால் அங்கு நோய்பரவல் மீண்டும் அதிகரிக்கிறது. இந்நிலையில், பிரதமர் ஜான்சன் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளார். அவர் தனது அறிவிப்பில், ‘‘வரும் 19ம் தேதி முதல் மாஸ்க் அணிந்து கொள்வது தனிநபர் சார்ந்த விருப்பம். சமூக இடைவெளியும் கட்டாயமில்லை.
அதே சமயம், தொற்றுநோய் முடிந்துவிடவில்லை என்பதையும், வரும் வாரங்களில் பாதிப்புகள் உயரும் என்பதையும் நான் வலியுறுத்துகிறேன். இந்த வைரசுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். நாம் அனைவரும் கொரோனா அபாயங்களை கவனமாக நிர்வகித்து, நம் வாழ்க்கையைப் நடத்த பழகி கொள்ள வேண்டும்’’ என்றார்.இந்த அறிவிப்புக்கு ஆய்வாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது மீண்டும் கொரோனா அலைக்கு வழிவகுக்கும் என எச்சரித்துள்ளனர்.