×

சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு இன்று அனுமதி இல்லை: கோயில் நிர்வாகம் தகவல்

ஊத்துக்கோட்டை: சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் இன்று தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொடர் நடவடிக்கை காரணமாக நோய் தொற்று வெகுவாக குறைந்தது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெருமளவு தளர்வுகள் அளிக்கப்பட்டது. பின்னர், இங்குள்ள மக்கள் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.
இந்நிலையில், நேற்று முதல் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து பகுதிகளில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதத்துக்கு பிறகு கோயில்கள், சர்ச்சுக்கள், மசூதிகள் திறக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோயில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட திருத்தணி முருகன் கோயில், திருவாலங்காடு சிவன் கோயில், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில், திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் உள்பட புகழ்பெற்ற கோயில்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மேற்கண்ட கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சில கோயில்களில் பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

மாவட்டத்தில் புகழ்பெற்ற சிறுவாபுரி முருகன் கோயிலும் திறக்கப்பட்டுள்ளது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் சென்ைன உள்பட பல பகுதியில் இருந்து பல்லாயிரக்காண பக்தர்கள் வருகை தருவார்கள். இதன்படி, இன்று செவ்வாய்க்கிழமை என்பதாலும் 60 நாட்களுக்கு பிறகு கோயில் நடை திறக்கப்பட்டுள்ளதால் வழக்கத்தைவிட பக்தர்கள் அதிகமாக கூடுவார்கள் என்று எதிர்பார்ப்படுகிறது. இதனால், சிறுவாரிபுரி முருகன் கோயிலில் இன்று பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்துவரும் பக்தர்களை கண்காணிக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கவும் மக்களின் நலன் கருதியும் கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Siruvapuri Murugan Temple , Siruvapuri, Murugan Temple, Devotees
× RELATED பங்குனி மாத செவ்வாய்க்கிழமை...