கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, திரிணாமுல் காங்கிரஸ் 3வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மம்தா தோல்வியடைந்தார். இருப்பினும், மே 5ம் தேதி அவர் முதல்வராக பதவியேற்றார். அதன்படி, நவம்பர் 5ம் தேதிக்குள் அவர் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மேற்கு வங்கத்தில் இடைத் தேர்தலை நடத்தும்படி தேர்தல் கமிஷனுக்கு, மாநில அரசு வலியுறுத்தியுள்ளது. வரும் நவம்பருக்குள் இடைத் தேர்தல் நடக்காவிட்டால், முதல்வர் பதவியில் இருந்து மம்தா விலக வேண்டியிருக்கும்.
ஆனால், கொரோனா பரவும் சூழலில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராக இல்லை. இதன் காரணமாகத்தான் சமீபத்தில் உத்தரகாண்ட் பாஜ முதல்வர் தீரத் பதவி விலகினார். இதே நிலை மம்தாவுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நந்திகிராம் தொகுதியில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி, பாஜ.வில் இணைந்த சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார். அவரது வெற் றியை எதிர்த்து மம்தா கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதில் வெற்றி பெற்றால் மம்தாவின் முதல்வர் பதவி தப்பும் நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.