×

எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.களில் கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட 30 வங்கி கணக்குகள் முடக்கம்!: சென்னை காவல்துறை தகவல்

சென்னை: எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.களில் கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட 30 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த மாதம் 17ம் தேதியில் இருந்து 19ம் தேதிக்குள்ளாக எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.களில் அடுத்தடுத்ததாக கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்தது. இது சம்பந்தமாக தனிப்படை அமைக்கப்பட்டு அரியானாவில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இதுவரை 4 வடமாநில கொள்ளையர்களை போலீசார் கைது செய்திருக்கின்றனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஒவ்வொரு நாளும் திடுக்கிடும் தகவல் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

இதில் நான்காவதாக கைது செய்யப்பட்ட வங்கி கொள்ளை கும்பல் தலைவன் சவுகத் அலியிடம் இருந்து பல்வேறு தகவல்கள் பெறுவதற்காக 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்களும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் 23 புகார்கள் வந்திருப்பதாகவும், சுமார் 1 கோடி ரூபாய் அளவிற்கு பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஏ.டி.எம். கார்டுகள் இருக்கும் வங்கி கணக்குகள் எத்தனை என்பதை எஸ்.பி.ஐ. வங்கி அதிகாரிகள் உதவியுடன் போலீசார் ஆய்வு செய்திருக்கிறார்கள்.

தற்போது எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.களில் கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட 30 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். பல இடங்களில் ஏ.டி.எம்.யில் இருந்து கொள்ளையடித்த பணத்தை உடனடியாக அவர்களது வங்கி கணக்கிலேயே ஏ.டி.எம். எந்திரத்தை பயன்படுத்தி டெபாசிட் செய்திருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கொள்ளையில் ஈடுபடுவதற்கு முன்பே மாநிலங்களிலும் இதே பாணியில் கொள்ளை நடந்துள்ளது.

தற்போது முதல்முறையாக இந்தியாவிலேயே இந்த வடமாநில கொள்ளை கும்பலை சென்னை போலீசார் தான் கைது செய்துள்ளது. மற்ற மாநிலத்தில் நடந்த கொள்ளை பற்றி அம்மாநில போலீசார் கேட்டுக்கொண்டால் சென்னை போலீஸ் உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Tags : SBI ,Chennai Police , SBI ATM, robbery, bank accounts, Chennai Police
× RELATED மூத்த குடிமக்களின் ஃபிக்சட் டெபாசிட்...