சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தன. வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் திறப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொழுதுபோக்கு பூங்காக்கள், சுற்றுலா மையங்களுக்கு செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் அனைத்து மாவட்டங்களிலும் பொது போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத்துக்கும் பொருந்தும் வகையில் தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, வரும் 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 50 சதவீத பயணிகளுடன் பொது பேருந்து போக்குவரத்து சேவைக்கு அனுமதிக்கப்பட்டதையடுத்து, முகக்கவசம் அணிந்தப்படி பயணிகள் பேருந்துகளில் இன்று காலை முதல் பயணத்தை மேற்கொண்டனர். இதேபோன்று அனைத்து வழிபாட்டுத் தலங்களும் அரசின் வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி காலை முதல் திறக்கப்பட்டது.
உணவகங்கள், தேநீர் கடைகள், உள்ளிட்டவைகளில் 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே உட்கார்ந்து சாப்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் மட்டுமே செயல்பட வேண்டும் எனவும், ஏசி வசதி இன்றி, வணிக வளாகங்களும் காலை 9 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8 மணி வரை செயல்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டு தளங்கள் திறப்பு
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வழிபாட்டிற்கு திறக்கப்பட்டு முககவசத்துடன் பக்தர்களுக்கு அனுமதி அழிக்கப்படுகிறது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வழிபாட்டிற்கு திறக்கப்பட்டு முககவசத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இரண்டு மாதங்களுக்கு பின்னர் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயம் திறக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் சிறப்பு பிரார்த்தனை தொடக்கம் செய்யப்பட்டுள்ளது.