×

இரவில் ஆள்மாறாட்டத்தால் பரிதாபம் ரவுடிக்கு பதிலாக மாமனாரை வெட்டி கொன்ற மர்ம கும்பல்: செம்மஞ்சேரியில் பரபரப்பு

துரைப்பாக்கம்: பிரபல ரவுடியை கொல்ல வந்த மர்ம நபர்கள், இரவில் ஆள்மாறாட்டம் காரணமாக அவரது மாமனாரை வெட்டி கொன்ற சம்பவம் செம்மஞ்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது. செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் வேலு (48). சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிரியா (45). இவர்களுக்கு தேன்மொழி, கனிமொழி என்ற 2 மகள்களும், நாத் என்ற மகனும் உள்ளனர். தேன்மொழியின் கணவர் சுரேஷ். பிரபல ரவுடி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வடிவழகன், அவரது தம்பி பாலாஜி ஆகியோருக்கு இடையே, முன் விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக இவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.  

வேலு இரவில் தனது வீட்டின் வெளியில் தூங்குவது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம்  இரவு மது அருந்திவிட்டு,  வீட்டின் வெளியே உள்ள கட்டிலில் வேலு தூங்கியுள்ளார். அதிகாலை சுமார் 3 மணி அளவில், 2 பைக்குகளில் அரிவாள், பட்டாக் கத்திகளுடன்  அங்கு வந்த 4 பேர், தூங்கிக் கொண்டு இருந்த வேலுவை சராமரியாக வெட்டிவிட்டு தப்பினர். படுகாயமடைந்த வேலு, ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் வேலுவை மீட்டு, அருகில் உள்ள  ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி வேலு இறந்தார்.

இதையடுத்து, செம்மஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முதற்கட்ட விசாரணையில், சேத்துப்பட்டு பகுதியில் கடந்த மாதம் வடிவழகன் என்பவர் கொலை செய்யப்பட்டதும், இதில், சுரேஷ் உள்ளிட்ட சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட வடிவழகனின் தம்பி பாலாஜி, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, சுரேஷ் உள்ளிட்டவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர்.

அதன்படி, நேற்று முன்தினம் அதிகாலை, செமஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதிக்கு வந்து, மாமானார் வீட்டின் வெளியே தூங்குவது சுரேஷ் என நினைத்து ஆள்மாறாட்டத்தில் வேலுவை வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது தெரிய வந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில், குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Rowdy ,Chemmancheri , Impersonation, rowdy, father-in-law, mysterious gang
× RELATED கட்சியில் ரவுடியை சேர்க்கவே ஐபிஎஸ்...