பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு பேரூரில் சேகரிக்கப்படும் குப்பை, இறைச்சி கழிவுகள் அங்குள்ள கொசஸ்தலை ஆற்றுப் பகுதியில் மலைப் போல் குவிப்பதால் நிலத்தடி நீர் மாசடையும் அபாயம் இருப்பதாக தினகரன் செய்தி எதிரொலி தொடர்ந்து உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் பொக்லென் இயந்திரம் மூலம் குப்பை கழிவுகள் அகற்றி சுத்தப்படுத்தினர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் வீடுகளிலிருந்து பேரூராட்சி தொழிலாளர்கள் சேகரிக்கும் குப்பை மற்றும் இறைச்சி கழிவுகளை கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் ஏரிக் கால்வாயில் கொட்டப்பட்டு வருகின்றது. பல ஆண்டுகளாக ஆற்றின் கரையில் குப்பை கழிவுகள் மலைபோல் குவித்து வைப்பதால், கொசஸ்தலை ஆற்றில் நிலத்தடி நீர் மாசடைந்து குடிநீர் பயன்ப்படுத்த முடியாத அபாயம் நிலவுகின்றது. இதுகுறித்து தினகரன் செய்தி படத்துடன் வெளியிட்டது.
இதனையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன் உடனடி நடவடிக்கையாக பொக்லைன் இயந்திரம் மூலம் மலைபோல் குவிந்திருந்த குப்பை கழிவுகளை முற்றிலும் அகற்றி கொசஸ்தலை ஆற்றில், கால்வாயில் வீசப்பட்ட இறைச்சி கழிவுகளை பேரூராட்சி பணியாளர்கள் அகற்றினர். மேலும் அனுமதியின்றி ஆற்றில் குப்பை, இறைச்சி கழிவுகள் கொட்டியவர்களுக்கு நோடீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வியாபாரிகள் கழிவுகளை பேரூராட்சி தூய்மை பணியாளர்களிடம் மட்டுமே வழங்க வேண்டும் என்று செயல் அலுவலர் கலாதரன் கேட்டுக்கொண்டார். பல ஆண்டுகளாக குப்பை இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம் வீசிவந்த நிலையில் தினகரன் செய்தி எதிரொலியால் தூய்மைப் படுத்தப்பட்டிருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.