விசாகப்பட்டினம்: ஜம்முவில் விமானப்படை தளத்தின் மீது கடந்த ஞாயிறன்று தீவிரவாதிகள், டிரோன்கள் மூலம் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து, தொடர்ந்து மூன்று நாட்களாக ஜம்மு காஷ்மீரில் டிரோன்கள் அடிக்கடி வந்து பீதியை கிளப்பி வருகின்றன. பாதுகாப்பு படைகள் அவற்றை விரட்டி வருகின்றன. மேலும், டிரோன்கள் மூலமாக நாட்டின் முக்கிய ராணுவ தளங்களின் மீது தாக்குதல் நடத்தக் கூடும் என உளவுத்துறைகள் எச்சரிக்கை விடுத்ததால், இந்த இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் கிழக்கு கடற்படையின் தலைமை தளம் அமைந்துள்ளது. கடற்படையின் முக்கிய போர்க்கப்பல்கள் இங்கு முகாமிட்டுள்ளன. இதனால், இந்த தளத்தை சுற்றி 3 கிமீ தூரத்துக்கு டிரோன்கள் பறப்பதற்கு நேற்று தடை விதிக்கப்பட்டது. மீறி பறக்க விடப்படும் டிரோன்கள் மீது சுட்டு வீழ்த்தப்படும் என்றும், அதை ஏவியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.