குயானியா: கோபா அமெரிக்கா கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில், பெரு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. இந்திய நேரப்படி நேற்று அதிகாலை குயானியாவில் நடந்த முதல் காலிறுதியில் பெரு - பராகுவே அணிகள் மோதின. ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் பராகுவே வீரர் குஸ்டவோ கோம்ஸ் முதல் கோலடித்து அணிக்கு முன்னிலை தந்தார். அவரே ஆட்டத்தின் 21 நிமிடத்தில் சுய கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைக்கும் கொண்டு வந்தார். அதன் பிறகு பெரு வீரர்கள் ஜியன்லுகா 40வது நிமிடத்திலும், யோஷிமிர் 80வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். பராகுவே தரப்பில் ஜூனியர் அலோன்சா 54வது நிமிடத்திலும், கேப்ரியல் 90வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். அதனால் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
இந்த தொடரில், இறுதிப் போட்டிக்கு மட்டுமே ‘எக்ஸ்ட்ரா டைம்’ என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் நேரம் வழங்காமல் நேரடியாக ‘பெனால்டி ஷூட் அவுட்’ கடைப்பிடிக்கப்பட்டது. அதில் 4 வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திய பெரு 4-3 என்ற கோல் கணக்கில் வென்ற்று 17வது முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தது. தொடர்ந்து ரியோ டி ஜெனீரோ நகரில் நடந்த 2வது காலிறுதியில் நடப்பு சாம்பியன் பிரேசில் - சிலி அணிகள் மோதின. லீக் சுற்றில் தட்டுதடுமாறி காலிறுதிக்குள் நுழைந்த சிலி அணி பிரசேிலுக்கு கடும் சவாலாக இருந்தது. முதல் பாதியில் 2 அணிகளின் கோல் முயிற்சிகள் பலனளிக்கவில்லை. 2வது பாதியின் 2வது நிமிடத்தில் பிரேசிலின் லூகாஸ் பகுட்டா கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்று தந்தார்.
அடுத்த நிமிடமே முரட்டு ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரேசிலின் கேப்ரியல் ஜீசஸ் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு பிரேசில் தற்காப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்த சிலியால் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்ட நேர முடிவில் பிரேசில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று 31வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது. இந்திய நேரப்படி ஜூலை 6ம் தேதி அதிகாலை நடைபெறும் முதல் அரையிறுதியில் பிரேசில் - பெரு அணிகள் மோதுகின்றன.