புதுடெல்லி: ‘மேற்கு வங்க பாஜ.வை சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியை சந்திக்கவில்லை,’ என ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மறுத்துள்ளார். மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் பாஜ.வை சேர்ந்த சுவேந்து அதிகாரி, ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை சந்தித்தது பேசியதாக, இம்மாநில ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நேற்று முன்தினம் குற்றம் சாட்டியது. இது தொடர்பாக டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட திரிணாமுல் எம்பி.க்கள் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், `நாட்டின் 2வது மிக உயர்ந்த சட்ட அதிகாரியாக இருக்கும் துஷார் மேத்தா, சாரதா, நாரதா ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுவேந்து அதிகாரியை சந்தித்தது முறையற்றது. இந்த வழக்குகளில் சிபிஐ தரப்பில் அவர் ஆஜராகிறார்.
இதனால், அவரை அப்பதவியிலிருந்து நீக்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், துஷார் மேத்தா நேற்று அளித்த பேட்டியில், ``சுவேந்து அதிகாரி என்னுடைய வீட்டிற்கு வந்த போது, உச்ச நீதிமன்றத்தில் உள்ள என அறையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று கொண்டிருந்தேன். எனது உதவியாளர்கள் அவர் வந்திருப்பதாக கூறியதும், சந்திக்க முடியாததற்கு வருத்தம் தெரிவிக்கும்படி கூறி அவரை திருப்பி அனுப்பம்டி சொன்னேன். அவரும் நன்றி தெரிவித்து விட்டு சென்று விட்டார். நான் அவரை சந்தித்ததாக கூறுவதற்கு இடமே இல்லை,’’ என்றார்.
மீண்டும் போலீஸ் பாதுகாப்பு
சுவேந்து அதிகாரிக்கு மேற்கு வங்க போலீசார் அளித்து வந்த பாதுகாப்பு, சமீபத்தில் விலக்கி கொள்ளப்பட்டுது. இதை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் சுவேந்து வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதி ஸ்வகாந்த் பிரசாந்த், `மாநில எதிர்க்கட்சித் தலைவர் ஏற்கனவே மத்திய அரசின் பாதுகாப்பில் இருந்தாலும், எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதன் அடிப்படையில் அவருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் பாதுகாப்பு வழங்குவது மாநில அரசின் பொறுப்பாகும். மாநில அரசின் பாதுகாப்பு தேவையில்லை என்றாலும், எந்தக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் இருக்க மாநில அரசு அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். எனவே, விலக்கப்பட்ட பாதுகாப்பை திருப்பி அளிக்க வேண்டும்,’ என உத்தரவிட்டார்.