சென்னை: திருவான்மியூர் மகாத்மா காந்தி சாலை பகுதியில் பிரபல நடிகை சனம் ஷெட்டி(35) வசித்து வருகிறார். இவர், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் சுமார் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில், இவர் நடித்த அம்புலி, வால்ட்டர் உள்ளிட்ட படங்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில், நேற்று காலை இவர் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் தனக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை தொடர்ந்து அனுப்பி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டிருந்தார். புகாரினை பெற்றுக்கொண்ட போலீசார் அடையாறு துணை ஆணையர் விக்ரமன் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் சைபர் கிரைம் போலீசாருக்கு புகாரை அனுப்பி வைத்தனர். சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.