புதுடெல்லி: பல்வேறு ஊழல் குற்ச்சாட்டில் சிக்கிய சுவேந்து அதிகாரி, துஷார் மேத்தாவை சந்தித்ததாக எழுந்த பரபரப்பில், தான் சுவேந்துவை சந்திக்கவில்லை என்று துஷார் மேத்தா தெரிவித்துள்ளார். மேற்குவங்க பாஜக மூத்த தலைவரும், நந்திகிராம் தொகுதி எம்எல்ஏவுமான சுவேந்து அதிகாரி மீதான ஊழல் வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்குகளில் சிபிஐ தரப்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி உள்ளார்.
இந்நிலையில், துஷார் மேத்தாவை சுவேந்து அதிகாரி நேற்று முன்தினம் சந்தித்துப் பேசியதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக அக்கட்சி எம்பிக்கள் நேற்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், துஷார் மேத்தாவை சொலிசிட்டர் ஜெனரல் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்விவகாரம் குறித்து துஷார் மேத்தா வெளியிட்ட அறிக்கையில், ‘‘வியாழக்கிழமையன்று எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் என்னை சந்திக்க சுவேந்து அதிகாரி வந்தார்.
ஆனால், அப்போது ஏற்கனவே திட்டமிட்ட சந்திப்புகளில் நான் ஈடுபட்டிருந்ததால், அவரை காத்திருக்குமாறு உதவியாளர் மூலம் கூறினேன். கூட்டம் முடிந்ததும், அவரை சந்திக்க முடியாத சூழ்நிலை இருப்பதை உதவியாளர் மூலம் தெரிவித்தேன். இதையடுத்து, என்னை சந்திக்காமல் சுவேந்து அதிகாரி சென்று விட்டார். இதனால், அவரை நான் சந்தித்தேன் என்ற கேள்வியே எழவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.