×

பீகார், உத்தரபிரதேசம், டெல்லியில் வைத்து ஆசிரம பெண்களை பலாத்காரம் செய்த சாமியார் கைது: மூன்றரை ஆண்டுக்கு பின் சுற்றிவளைத்து பிடித்தது போலீஸ்

லக்னோ: பீகார், உத்தரபிரதேசம், டெல்லியில் வைத்து ஆசிரம பெண்களை பலாத்காரம் செய்த பாபா என்கிற சாமியாரை மூன்றரை ஆண்டுகளுக்கு பின் போலீசார் கைது செய்துள்ளனர்.
பீகார் மாநிலம் மிதாபூரில் உள்ள கயா கும்தி பர்மாவில் வசித்து வந்த பாபா என்கிற சாமியார் சச்சிதானந்தா, கடந்த சில ஆண்டுகளுக்க முன் உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டம் செல்ஹாராவில் ஆசிரமம் அமைத்து மக்களுக்கு ஆசியுரைகளை வழங்கி வந்தார். இவரை, அப்பகுதியினர் தயானந்த், பகதானந்தா, பிரசாந்த் குமார், சாந்த்குமார் என்று வெவ்வேறு பெயர்களில் அழைத்து வந்தனர்.

கடந்த 2017ம் ஆண்டு வாக்கில் ஆசிரமத்தில் இருந்த பெண் பக்தை ஒருவரை, சாமியார் சச்சிதானந்தா பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட பெண் பக்தை கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்வாலி போலீசார் பலாத்கார வழக்குபதிந்தனர். ஆனால், வழக்கு பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து சாமியார் சச்சிதானந்தா தலைமறைவாக இருந்தார். கிட்டதிட்ட மூன்றரை ஆண்டாக தலைமறைவாகவே உள்ள சச்சிதானந்தா குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.50,000 சன்மானம் வழங்கப்படும் என்றுகூட போலீசார் கிராம மக்களிடம் அறிவித்து இருந்தனர். இதற்கிடையே, இவரது சீடர்களான பரமச்சேதனந்தா மற்றும் ஊர்மிளா பாய் ஆகியோரை கடந்த 2018 ஆகஸ்ட் 5ம் தேதி பாபனன் ரயில் நிலையம் அருகே போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநில எஸ்டிஎப் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, மொராதாபாத்தில் பதுங்கியிருந்த பாபா சச்சிதானந்தாவை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் எஸ்பி ஆஷிஷ் வாஸ்தவா கூறுகையில், ‘கடந்த மூன்றரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பாபா சச்சிதானந்தாவை எஸ்டிஎப் போலீசார் கைது செய்து பஸ்தி போலீசிடம் ஒப்படைத்துள்ளனர். ஆசிரமத்திற்கு வரும் பெண்களுக்கு ஆசியுரை, பிரசாதம் தருதல் என்ற பெயரில் அவர்களிடம் வசியம் செய்வார். பின்னர், அவர்களில் சிலரை ஆசிரம பெண் சீடராக பணியில் அமர்த்திக் கொள்வார். அவ்வாறு பணியாற்றி வந்த 5க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இவரது சீடர்கள் சிலரும், பெண்களை பலாத்காரம் செய்துள்ளனர். இவர்கள் மீது ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. பீகார், உத்தரபிரதேசம் மற்றுமின்றி டெல்லியில் உள்ள ஆசிரமத்திற்கும் பெண்களை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது கைதான பாபா சச்சிதானந்தாவை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரித்தால், மேலும் பல தகவல்கள் கிடைக்கும்’ என்றார்.


Tags : Samiar ,Ashirama ,Bihar, Uttar Pradesh, Delhi , Preacher arrested for raping Ashram girls in Bihar, Uttar Pradesh, Delhi: Police round up after three-and-a-half years
× RELATED சாமியாரின் ஆசிரமத்தில் மர்மான...