×

நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவிற்கு எதிராக விளம்பர நோக்கில் பாஜக வழக்கு: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

சென்னை : நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஜனநாயகத்தை ஒடுக்கும் முயற்சி என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவை அமைத்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி பாஜக பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய உண்மை கண்டறியும் குழுவை நியமித்ததின் மூலம் மனுதாரரின் அடிப்படை உரிமைகள் எப்படி பாதிக்கப்படும் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிற்கு 84,343 மனுக்கள் வரப்பட்டுள்ளதாகவும், நீட் பாதிப்பு குறித்து பெற்றோரும் மாணவர்களும் கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனுதாரர் ஒரு மாணவரோ பெற்றோரோ இல்லை என்றும் அரசியல் கட்சியின் நிர்வாகியான அவர், விளம்பரத்திற்காக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.ஏழை மாணவர்கள் தனியார் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று நீட் பயிற்சி பெற இயலாத நிலை உள்ளதாக பலர் சுட்டிக் காட்டியதை பதில் மனுவில் அரசு குறிப்பிட்டுள்ளது. பாடப்புத்தகங்கள் பயிற்றுவிக்கும் முறை, தேர்வு நடைமுறை, மதிப்பீடு என அனைத்திலும் தமிழ்நாடு பள்ளி கல்வி வாரியத்திற்கும் பிற கல்வி வாரியங்களுக்கும் இடையே வித்தியாசம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்கள் பல முறை தேர்வு எழுதிய பின்னரே நீட் தேர்வில் தேர்ச்சி அடைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.மருத்துவ படிப்பில் தற்போதைய நிலையை ஆராயவும் அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பை உறுதி செய்யவும் ஒரு ஆய்வு என்பது அவசியமாவதால் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு அரசு பள்ளி மற்றும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பதை ஆராய்வதற்கு மட்டுமே இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் இது உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானது என்று கூற முடியாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. குழு அரசுக்கு அறிக்கை அளிக்காத நிலையில், மனுதாரர் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் அதை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது

Tags : TN Government ,Court , நீட் பாதிப்பு
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...