காரைக்குடி: காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவது குறித்து அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் 10க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எம்எல்ஏ எஸ்.மாங்குடி பேசுகையில், காரைக்குடியில் நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளியாகவும், உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் உள்கட்டமைப்பு மேம்படுத்துவதே எனது முதல் இலக்கு.
அதற்கு பள்ளி தலைமையாசிரியர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். தேவகோட்டையில் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் அதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமைக்க வேண்டும். பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள் நியமிக்க வேண்டும் என தலைமையாசிரியர்கள் வைத்த கோரிக்கையை அமைச்சரிடம் தெரிவித்து நிறைவேற்றப்படும். ஒவ்வொரு ஆண்டும் 20 பள்ளிகள் என எடுத்து படிப்படியாக தொகுதி முழுவதும் தேவையான வசதிகள் செய்யப்படும். அனைத்து வசதியுடன் கூடிய தன்னிறைவு பெற்ற பள்ளியாக மாற்ற வேண்டும் என்றார்.