சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து முதியோர் இல்லங்களும் (கட்டணம் / கட்டணமில்லா), தனியார் / தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்திடும் அனைத்து முதியோர் இல்லங்களும், முதியோர்களுக்கான குத்தகை விடுதிகள் மற்றும் வாடகை விடுதிகளும் 2009ம் ஆண்டைய தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல விதிகளின் கீழ் 31.07.2021-க்குள் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை 23.11.2016-ல் வெளியிடப்பட்டுள்ள நெறிமுறைகளின்படி இந்த இல்லங்களை பராமரிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
மகளிர் விடுதிகள் நடத்தும் தனியார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்கள் விடுதிகளை 2014ம் ஆண்டைய தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்கள் (ஒழுங்குமுறைப்படுத்தும்) சட்டத்தின் பிரிவுகள் 3 மற்றும் 4 ஆகியவற்றின் படி விடுதிகள் நடத்துபவர்கள் வருகிற 31ம் தேதிக்குள் உரிமம் பெற்று கட்டாய பதிவு செய்யப்பட வேண்டும். அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகளின்படி இந்த விடுதிகள் பராமரிக்கப்பட வேண்டும். இந்த அறிவுரைகளை பின்பற்ற தவறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். மேலும் விவரங்களுக்கு சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.