சென்னை: சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு, குறித்த காலத்தில் தரமான விதை நெல்மணிகள் அனைவருக்கும் வழங்கப்படவில்லை என்று நடவு பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெரிதும் வேதனை அடைந்துள்ளதாக சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே, வரகூரைச் சேர்ந்த விவசாயி வீரமணி தனது 9 ஏக்கர் நிலத்தில், 7 ஏக்கரில் தனியாரிடம் இருந்து ஏ.டி., 36 ரக நெல் விதையை வாங்கி நாற்று தயார் செய்துள்ளதாகவும், மீதமுள்ள 2 ஏக்கருக்கு, செந்தலை வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருந்து கோ-51 ரக விதை நெல்லை வாங்கி நாற்று தயார் செய்து விதைத்ததாகவும், ஏறத்தாழ விதைத்து 12 நாட்களாகியும் அரசு வழங்கிய விதை நெல்கள் முளைக்கவில்லை என்று விவசாயி வேதனை தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி வீரமணி, வேளாண் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லை. அரசின் அலட்சியத்தால் பாதிப்படைந்துள்ள விவசாயி வீரமணிக்கு புதிய நெல் விதையை இலவசமாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.