சஹரன்பூர்: இது மாம்பழ சீசன். வகை வகையான மாம்பழங்களை வாங்கி மக்கள் ருசித்து வருகின்றனர். அதேபோல், இந்த சீசனில் மாம்பழங்கள் பற்றிய சுவாரசியமான தகவல்களும் வெளியாகி வருகின்றன. மத்திய பிரதேசத்தில் விளையும் கிலோ ரூ.2.7 லட்சம் வரை விற்கும் மியாசாகி மாம்பழம், பாகிஸ்தானில் விளையும் சர்க்கரை இல்லாத மாம்பழம், 3 கிலோ வரை வளரும் மாம்பழம் என விதவிதமான செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த வகையில், தற்போது உத்தர பிரதேசத்தில் ஒரே மரத்தில் 121 வகையான மாங்காய்கள் காய்க்கும் அதிசயம் பற்றி தகவல் வெளியாகி இருக்கிறது.
உத்தர பிரதேசத்தில் உள்ளது சஹரன்பூர். இங்குள்ள தோட்டக்கலை துறை துணை இயக்குநரான ராஜேஷ் பிரசாத்துக்கு ஒரு வினோத ஆசை. ஒரே மாமரத்தில் பல விதமான மாங்காய் ரகங்களை விளைவிக்க யோசித்தார். அதற்கான தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாங்கன்றை உருவாக்கினார். அதை பராமரிக்க, தனியாக ஒருவரையும் நியமித்தார். இந்த மாமரத்தில் தற்போது 121 வகையான மாங்காய்கள் காய்க்கின்றன. அனைத்தும் ஒவ்வொரு ருசியில் உள்ளன. மாமரம் பற்றிய செய்திகளில் இப்போதைய பரபரப்பு பேச்சு இதுதான். இனிமேல், பல வகையான மாம்பழங்களுக்காக தோட்டத்தை வைக்க வேண்டியதில்லை. ஒரே மரத்தில் மாந்தோட்டத்தை அமைத்து விடலாம்.