சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி காடகநல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பொன்னான்(50). இவர் தனது விவசாய தோட்டத்தில் பசுமாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாடுகளை மேய்ச்சலுக்காக அவிழ்த்து விட்டுள்ளார். மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகளில் ஒரு மாடு வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் நேற்று காலை பொன்னான் காணாமல் போன பசுமாட்டை தேடி சென்று பார்த்தபோது வனப்பகுதியை ஒட்டியுள்ள விளை நிலத்தில் பசுமாடு கழுத்தில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இறந்த மாட்டின் அருகே பதிவான விலங்கின் கால்தடம் புலியின் கால் தடம் போல் இருந்ததால் உடனடியாக கடம்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் பசுமாட்டை புலி தாக்கி கொன்றதை உறுதி செய்தனர். புலி தாக்கி பசு மாடு இறந்த சம்பவம் கடம்பூர் மலைப்பகுதி விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புலி தாக்கி உயிரிழந்த பசு மாட்டின் உரிமையாளருக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.