புதுச்சேரி : புதுச்சேரியில் ஊரடங்கில் அரசு அடுத்தடுத்து தளர்வுகளை அறிவித்துள்ளதால் 2 மாதங்களுக்குபின் மீண்டும் சின்னத்திரை மற்றும் சினிமா படப்பிடிப்புகள் தொடங்கி உள்ளன. புதுச்சேரியில் கடந்த 21ம்தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. மேலும் சில தளர்வுகளை அளித்து வரும் 15ம்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதில் கடற்கரை சாலை, பூங்காக்களில் நடைபயிற்சி மேற்கொள்ளவும், வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் தரிசனம் செய்ய இரவு 9 மணி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தியேட்டர்கள், அரசியல் கூட்டங்கள் நடத்த தொடர்ந்து தடை அமலில் இருக்கிறது.
தமிழகத்தைபோல் புதுச்சேரியிலும் சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளை 10 பேருடன் நடத்த அரசு அனுமதித்திருந்தது. 2 மாத இடைவெளிக்குபின் புதுச்சேரியில் சின்னத்திரை மற்றும் சினிமா படப்பிடிப்புகள் தொடங்கி உள்ளன. புஸ்சி வீதி பழைய நீதிமன்ற வளாகம் ஒட்டிய ஓட்டல் மற்றும் அலைன்ஸ் பிரான்சே அருகே செட் அமைத்து மலையாள படமான பிரம்மம் படத்தின் ஷீட்டிங் நடைபெற்றது. 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே பங்கேற்று படப்பிடிப்பு பணிகளை மேற்கொண்டனர். இத்தாலியில் இப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டது.
கொரோனா பரவலால் அங்கு செல்ல முடியவில்லை. இத்தாலி போன்றே அமைப்புடன் உள்ள புதுச்சேரியில் விடுபட்ட காட்சிகளின் ஷூட்டிங் நடந்து வருகிறது. அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு சினிமா ஷூட்டிங் துவங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.