வேலூர் : வேலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பரலாக மழை பெய்தது. அம்முண்டியில் அதிகபட்சாக 110.1 மி.மீ மழை கொட்டியது. வேலூர் மாவட்டத்தில் கோடை காலம் முடிந்த பிறகும் நேற்றுமுன்தினம் வெயில் 103.3 டிகிரியாக பதிவானது. இதனால் காலை முதல் அனல் காற்றுடன் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக வேலூர், காட்பாடி, கே.வி.குப்பம், திருவலம் உட்பட பகுதிகளில் லேசானது முதல் பலத்த மழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இரவு தொடங்கிய மாலை காலை 6 மணி வரை பெய்தது. மேலும் சாலைகளிலும், தெருக்களிலும் மழைநீர் தேங்கி உள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக வேலூர் சர்க்கரை ஆலை (அம்முண்டியில்) 110.1 மி.மீ மழை கொட்டியது.
மற்ற இடங்களில் பெய்த மழை நிலவரம்: குடியாத்தம்-5.6 மி,மீ, காட்பாடியில்-25.4, மேல்ஆலத்தூர்-7.2, பொன்னயில்-18.2, வேலூர்-15.6 ஆகிய இடங்களில் மொத்தமாக 182.10 மி.மீ மழையும், சாரசரியாக 30.35 சதவீதம் பதிவாகி உள்ளது. வேலூரில் தாழ்வான பகுதியான சம்பத் நகரில் குடியிருப்பு பகுதியில் கழிவுநீருடன், மழைநீரும் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர். மேலும் வேலூர் தற்காலிக மார்க்கெட்டில் ஒரு பகுதியும் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் வியாபாரம் செய்ய முடியாமல் வியாபாரிகள் அவதி அடைந்தனர். வெயிலின் தாக்குதலில் தத்தளித்த பொதுமக்களுக்கு இந்த மழை நிம்மதியை தந்துள்ளது.