திருப்பதி : திருச்சானூர் அடுத்த தனபள்ளி ஜங்ஷன் பகுதியில் காரில் கடத்தி வந்த 74 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, கணவன் மற்றும் மனைவி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருப்பதி நகரில் போதை பொருட்கள் விற்கப்படுவதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேலும், திருப்பதி எஸ்பி வெங்கட அப்பல் உத்தரவின் பேரில் சிறப்பு தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனபள்ளி ஜங்ஷன் பகுதியில் 75 கிலோ மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து திருச்சானூர் காவல் நிலையத்தில் கூடுதல் எஸ்பி ஆரிப்புல்லா நிருபர்களிடம் கூறியதாவது: விசாகப்பட்டினம் மாவட்டம், நரசிபட்டணம் பகுதியில் திருப்பதிக்கு கஞ்சா கடத்தி வருவதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், திருச்சானூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுதாகர், திருப்பதி கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சிவபிரசாத் உள்ளிட்ட போலீசார் தனபள்ளி ஜங்சன் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தினர். போலீசாரை பார்த்த அவர்கள் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓட முயற்சித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து காரை சோதனை செய்தனர். அதில், 36 பாக்கெட்டுகளில் ₹10 லட்சம் மதிப்புள்ள 74 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடரமணா அவரது மனைவி சாந்தம்மா, குணசேகர், ரமணா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து காருடன் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், வழக்குப்பதிந்து இந்த கடத்தலுக்கு தொடர்புடைய 2 பேரை தேடி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.