சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச உண்டு உறைவிடப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு, பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா சிபிசிஐடி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். சிவசங்கர் பாபாவிற்காக மாணவிகளை மூளைச்சலவை செய்ததாக அவரது பக்தை சுஷ்மிதாவும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்டு வரும், பள்ளியின் ஆங்கில ஆசிரியை தீபா வெங்கட்ராமன், பள்ளி நிர்வாகி ஜானகி சீனிவாசன், அவரது மருமகளும் பாபாவின் பக்தையுமான பாரதி, திவ்யா பாலசுப்பிரமணியம், கனகாம்பிகை ஆகியோர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி எம்.தண்டபாணி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல் திலக்ராஜ், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சிவசங்கர் பாபா மற்றும் அவருக்கு உதவியதாக புகாருக்கு உள்ளானவர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவிகள் விசாரணை நீதிமன்றத்தில் அளித்த ஒப்புதல் வாக்குமூலங்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மேலும், இந்த விவகாரத்தில் பதிவான 3 வழக்குகளின் விசாரணை தொடர்பாக தகவல்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உள்ளதாகவும், விசாரணையைத் தள்ளிவைக்க வேண்டும் என்று கோரினார்.
இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் ஏ.நடராஜன், ரமேஷ், வக்கீல் டி.செல்வம் ஆகியோர் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி, முதல் தகவலறிக்கைகள் உள்ளிட்ட வழக்கு தொடர்பான ஆவணங்களை மனுதாரர்கள் தரப்புக்கு வழங்குமாறு உத்தரவிட்டு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்தார்.