சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் விஜயராணி வெளியிட்டுள்ள அறிக்கை: டாக்டர் தரமணி தர்மாம்பாள் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2021-22 ம் கல்வி ஆண்டிற்கான (டிப்ளமோ) பட்டய படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. ஆர்க்கிடெக்சுரல் அசிஸ்டன்ட்ஷிப் (3, 1/2 வருடம்), சிவில் என்ஜினியரிங், கம்ப்யூட்டர் என்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அன்டு கம்யூனிகேஷன் என்ஜினியரிங், இன்ஸ்ட்ரூமென்டேஷன் அன்டு கன்ட்ரோல் என்ஜினியரிங், கார்மெண்ட் டெக்னாலஜி, என்விரான்மெண்டல் என்ஜினியரிங், கமர்ஷியல் பிராக்டீஸ் (வணிகவியல்) ஆகிய பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகிறது.
மேலும், கல்லூரியின் ஆண்டு கல்வி கட்டணம் ரூ.2160 மட்டும். இக்கல்லூரியில் தங்கி பயில விடுதி வசதியும் உண்டு. இலவச பஸ் பாஸ், முதலாமாண்டு மாணவிகளுக்கு இலவச பாட புத்தகங்கள் மற்றும் அரசால் அறிவிக்கப்படும் நலத்திட்டங்கள் பெற்று தரப்படும். www.tngptc.in அல்லது www.tngptc.com என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை வீட்டிலிருந்தபடியே செல்போன் அல்லது கணினி மூலமாக எந்த பாடப்பிரிவிற்கும் பதிவு செய்யலாம். இணையதளம் வழியாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் மாவட்ட சேவை மையங்கள் மற்றும் டிபிஏஎஃப்சி (TPAFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. வரும் 12ம் தேதி (ஜூலை) விண்ணப்பிக்க கடைசி நாள்.