சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவு, பகல் பாராமல் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் சந்திக்கும் சவால்கள் ஏராளம். கொரோனாவால் மருத்துவர்கள் உயிரிழந்த போதும், ஏராளமான மருத்துவர்களுக்கு தொற்று ஏற்பட்ட போதும், தங்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு என தெரிந்தும், ஒவ்வொரு மருத்துவரும் அர்ப்பணிப்போடு பணி செய்து வருகிறார்கள்.
தமிழகத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது படிப்படியாக குறைந்து வருவதற்கு முக்கிய காரணம் மருத்துவர்கள் தான். ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி பல ஆண்டுகளாக மருத்துவர்கள் போராடி வருகின்றனர். அவர்களது கோரிக்கையை இதற்கு முந்தைய அரசு நிறைவேற்றவில்லை. எனவே, தற்போதுள்ள புதிய அரசாவது மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.