×

50 லட்சம் தமிழர்களின் ஆதார், மொபைல் எண்கள் இணையத்தில் கசிவு : தமிழ்நாட்டை அதிரவைக்கும் ஹேக்கர் கும்பல்!

சென்னை : தமிழ்நாடு அரசின் உணவுப்பொருள் வழங்கல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து (Tnpds.gov.in) மக்களின் தரவுகளை ஹேக்கர்கள் திருடியுள்ளனர். இந்த ஹேக்கை பெங்களூரைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிறுவனமான TechniSanct கண்டுபிடித்துள்ளது.இந்த தரவுகளை 1945VN என்ற பெயர் கொண்ட ஹேக்கர் கும்பல் திருடியிருப்பதாகவும், தமிழர்களின் தரவுகளை விற்பதற்காக இணையத்தில் கசியவிட்டதாகவும் கூறியுள்ளது.

 49 லட்சத்து 19 ஆயிரத்து 668 தமிழர்களின் ஆதார் விவரங்கள், அவர்களின் வீட்டு முகவரி உள்ளிட்டவற்றை திருடியிருக்கிறது. அதேபோல 3 லட்சத்து 59 ஆயிரத்து 485 மொபைல் எண்களையும் ஹேக் செய்துள்ளது. அரசு சேவைகளைப் பெறவும் சான்றிதழ்களை ஒருங்கினைக்கும் திட்டமாக “மக்கள் நம்பர்” என்ற பிரத்யேக எண் சேவையை 2019ம் ஆண்டு அரசு அறிமுகம் செய்தது. இதில் பிறந்த குழந்தையின் விவரங்கள் கூட அடங்கியிருக்கின்றன.

இதுதொடர்பாக TechiniSanct நிறுவனத்தின் சிஇஓ நந்தகிஷோர் ஹரிகுமார் கூறுகையில், “ஹேக்கர்கள் திருடப்பட்ட தமிழர்களின் தரவுகள் ஜூன் 28ம் தேதி இணையத்தில் கசியவிடப்பட்டது. நாங்கள் உடனே கண்டுபிடித்துவிட்டோம். ஆனால் கசிந்த ஒரு மணி நேரத்திற்குள் அவற்றை ஹேக்கர்கள் டெலிட் செய்துவிட்டார்கள். அதேபோல இதுகுறித்து தமிழ்நாடு சைபர் பிரிவின் ஏடிஜிபியிடம் தகவல் கொடுத்துவிட்டோம். இந்தியாவைச் சேர்ந்த அவசரகால கணினி பாதுகாப்பு குழுவிடம் (CERT-in) அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தரவுகளை நேரடியாக அரசின் இணையதளத்திலிருந்து திருடினார்களா அல்லது மூன்றாம் தர இணையதளங்களில் திருடினார்களா என்பது குறித்து நாங்கள் மேலும் ஆய்வு செய்துவருகிறோம்” என்றார்.


Tags : Aadar ,Tamil Nadu , உணவுப்பொருள் வழங்கல் துறை
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...