×

பெரியார் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமித்து ஆளுநர் உத்தரவு

சென்னை: சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் புதிய துணை வேந்தராக டாக்டர்.ஆர்.ஜெகன்நாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை தமிழக ஆளுநர் நேற்று வெளியிட்டார். தமிழக ஆளுநரும், பெரியார் பல்கலைக் கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக டாக்டர்.ஆர். ஜெகன்நாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 3 ஆண்டுகள் அந்த பதவியில் இருப்பார். புதிய துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள ஜெகன்நாதன் 39 ஆண்டுகள் கற்பித்தலில் பணியில் அனுபவம் பெற்றவர். இவர் கோவையில் உள்ள வேளாண் பல்கலைக் கழகத்தின் தலைவராகவும், வேளாண் வானிலை மற்றும் குறிப்பிட்ட இடத்தின் வானிலை குறித்த ஆராய்ச்சித்துறையின் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

ஆராய்ச்சியில் பரந்த அனுபவம் உள்ள இவர் 55 ஆராய்ச்சிக் கட்டுரைகளை அறிவியல் சார்ந்த இதழில் வெளியிட்டுள்ளார். சர்வதேச அளவிலான நிகழ்வுகள் மற்றும் 5 சர்வதேச ஆராய்ச்சி நிகழ்வுகளையும் நடத்தியுள்ளார். தேசிய அளவில் நடந்த கருத்தரங்கில் 7 ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளார். ரூ.764 கோடி மதிபிலான 8 ஆராய்ச்சி திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளார். 14ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்துள்ளார். இவர் மூலம் ஒரு காப்புரிமையும், 2 சர்வதேச புரிந்துணர்வு ஒப்பந்தகளும் செயல்படுத்தப்பட்டுள்ளன. தற்போது பெரியார் பல்கலைக் கழகத்தின் புதிய துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து இவர் அந்த பதவியில் 3 ஆண்டுகள் நீடிப்பார்.

Tags : Governor ,Vice Chancellor ,Periyar University , Governor orders appointment of Vice Chancellor to Periyar University
× RELATED ஊழல் பல்கலைக்கழகங்களும்… கைதாகும்...