பெங்களூரு: மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகாவிற்கு ரயில் பயணம் மேற்கொள்ள கட்டாயம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருவதால், பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கில் தளர்வுகளை அளித்து வருகின்றன. பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்திற்கு, கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு மாநில அரசுகள் அனுமதி வழங்கி வருகின்றன.
இதனையடுத்து, தென்மேற்கு ரயில்வே தெரிவித்து உள்ளதாவது: மஹாராஷ்டிராவில் இருந்து கர்நாடகாவிற்கு ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள், கட்டாயம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்கள் 72 மணி நேரத்திற்கு மிகாமல், ஆர்.டி.-பி.சி.ஆர்., பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அப்போது தான் ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவர். இவ்வாறு நிபந்தனை விதித்துள்ளது.