ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் நடந்த ஜமாபந்தியில் 410 மனுக்கள் வரப்பெற்றன. இதில் 60 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜ் தலைமையில் கடந்த 23ம் தேதி ஜமாபந்தி தொடங்கியது. இதில் ஒட்டன்சத்திரம் வட்டத்திற்குட்பட்ட சின்னக்காம்பட்டி, புலியூர்நத்தம், கள்ளிமந்தையம், தேவத்தூர், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட குறுவட்டத்திற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்திருந்தனர். இதில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் விண்ணப்பித்திருந்தோர் மட்டுமல்லாமல் பட்டா மாறுதல், வாரிசு சான்று, சிறு, குறு விவசாயி சான்று, விதவைச் சான்று உள்ளிட்ட 410 மனுக்கள் வரப்பெற்றது.
ஜமாபந்தி நேற்று முடிவடைந்த நிலையில் 60 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மேலும் பைபாஸ் சாலைக்காக நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டவர்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் 15 நாட்களில் தீர்வு காணப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜ் தெரிவித்தார். இந்நிகழ்வில் வட்டாட்சியர் சசி, மண்டல துணை வட்டாட்சியர் விஜயக்குமார், வருவாய் ஆய்வாளர் பத்மாவதி, தலைமை நில அளவையர் கார்த்திகேயன், கிராம நிர்வாக அலுவலர் தமிழ்செல்வி உள்ளிட்ட வருவாய்துறையினர் கலந்துகொண்டனர்.