சென்னை: ஏடிஎம் மையங்களில் நூதன முறையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அரியானா மாநிலத்தைச் சேர்ந்த நஜீம் உசேனை ஜூலை 13ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் அமீர் அர்ஷ் மற்றும் அவனது கூட்டாளி வீரேந்திர ராவத் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த கொள்ளையில் தொடர்புடைய மூன்றாவது நபர் நஜீம் உசேன் என்பவனை அரியானாவில் போலீசார் கைது செய்து விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தனர். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு பின் நீதிபதி முன் நஜீம் உசேன் ஆஜர்படுத்தப்பட்டான். பின்னர் நஜீம் உசேனை ஜூலை 13ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி சகானா உத்தரவிட்டார்.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வங்கி ஏ.டி.எம். மையங்களை குறி வைத்து கடந்த 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நூதன கொள்ளை சம்பவங்கள் நடந்தன. 30-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம். மையங்களில் ரூ.1 கோடிக்கு மேல் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வங்கி ஏ.டி.எம். மையங்களில் பணம் செலுத்தும் எந்திரங்களின் வாயிலாக நூதன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இந்த கொள்ளை சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையங்களில் மட்டும் கொள்ளையடிக்கப்பட்டது. சென்னையில் மட்டும் 15 ஏ.டி.எம். மையங்களில் ரூ.50 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது.